நீதிமொழிகள் 14

முந்திய அடுத்த
1⁽ஞானமுள்ள பெண்கள் தம் இல் லத்தைக் கட்டியெழுப்புகின்றனர்; அறிவற்றவரோ தம் கைகளைக் கொண்டே அதை அழித்துவிடுகின்றனர் .⁾ 2⁽நேர்மையாக நடப்பவஆண்டவரிடம் அச்சம் கொள்வார்; நெறிதவறி நடப்பவன் அவரைப் பழிப்பான்.⁾ 3⁽மூடனது இறுமாப்பு அவனை மிகுதியாகப் பேசச் செய்யும்; ஞானமுள்ளவருடைய சொற் களோ அவரைப் பாதுகாக்கும்.⁾ 4⁽உழவு மாடுகள் இல்லையேல் விளைச்சலும் இல்லை; வலிமைவாய்ந்த காளைகள் மிகுந்த விளைச்சலை உண்டாக்கும்.⁾ 5⁽வாக்குப் பிறழாத சாட்சி பொய்யுரையான்; பொய்ச்சாட்சியோ மூச்சுக்கு மூச்சு பொய் பேசுவான்.⁾ 6⁽ஒழுங்கீனன் ஞானத்தைப் பெற முயலுவான்; ஆனால் அதை அடையான்; விவேகமுள்ளவரோ அறிவை எளிதில் பெறுவார்.⁾ 7⁽மூடனைவிட்டு விலகிச் செல்; அறிவுடைய பேச்சு அவனிடம் ஏது?⁾ 8⁽விவேகமுள்ளவரது ஞானம் அவரை நேர்வழியில் நடத்தும்; மதிகேடர் மடமை அவனை ஏமாறச் செய்யும்.⁾ 9⁽பாவக்கழுவாய் தேடுவதை மூடர் ஏளனம் செய்வர்; மூடரின் இல்லத்தில் குற்றப்பழி தங்கும்; நேர்மையாளரின் இல்லத்தில் மகிழ்ச்சி தவழும்.⁾ 10⁽ஒருவரது இன்பமோ துன்பமோ, அது அவருடையதே; வேறெவரும் அதைத் துய்க்க இயலாது.⁾ 11⁽பொல்லாரின் குடி வேரோடழியும்; நேர்மையாளரின் குடும்பம் தழைத்தோங்கும்.⁾ 12⁽ஒரு பாதை ஒருவருக்கு நல்வழி போலத் தோன்றலாம்; முடிவிலோ அது சாவுக்கு நடத்தும் பாதையாகிவிடும்.⁾ 13⁽நகைப்பிலும் துயரமுண்டு; மகிழ்ச்சியை அடுத்து வருத்தமும் உண்டு.⁾ 14⁽உண்மையற்றவர் தம் நடத்தையின் விளைவைத் துய்ப்பார்; நல்லவர் தம் செயல் களின் பயனை அடைவார்.⁾ 15⁽பேதை தன் காதில் விழும் எதையும் நம்புவார்; விவேகமுள்ளவரோ நேர்வழி கண்டு அவ்வழி செல்வார்.⁾ 16⁽ஞானமுள்ளவர் விழிப்புடைவர்; தீமையை விட்டு விலகுவர். மதிகேடரோ மடத்துணிச்சலுள்ளவர்; எதிலும் பாய்வார்.⁾ 17⁽எளிதில் சினங்கொள்பவர் மதிகேடா னதைச் செய்வார்; விவேகமுள்ளவரோ பொறுமை யோடிருப்பார்.⁾ 18⁽பேதையர் அறியாமையுடையோர்; விவேகமுள்ளவர்கள் சூடும் மணிமுடி அறிவாகும்.⁾ 19⁽தீயவர் நல்லார்முன் பணிவர்; பொல்லார் சான்றோரின் வாயிற்படியில் காத்து நிற்பர்.⁾ 20⁽ஓர் ஏழையை அடுத்திருப்போர் அவரை அருவருப்பானவர் எனக் கருதுவர்; செல்வ ருக்கோ நண்பர் பலர் இருப்பர்.⁾ 21⁽அடுத்திருப்பாரை இகழ்தல் பாவமாகும்; ஏழைக்கு இரங்குகிறவர் இன்பம் துய்ப்பார்.⁾ 22⁽தீய சூழ்ச்சி செய்பவர் தவறிழைப்பர் அன்றோ? நலம் தரும் திட்டம் வகுப்போர் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவர்.⁾ 23⁽கடும் உழைப்பு எப்போதும் பயன் தரும்; வெறும் பேச்சினால் வருவது வறுமையே.⁾ 24⁽ஞானிகளுக்கு அவர்களது விவேகமே மணிமுடி; மதிகேடருக்கு அவர்களது மடமை தான் பூமாலை.⁾ 25⁽உண்மைச் சான்று உயிரைக் காப்பாற்றும்; பொய்ச் சான்று ஏமாற்றத்தையே தரும்.⁾ 26⁽ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஒருவருக்குத் திடநம்பிக்கை அளிக்கும்; அவர் தம்முடைய பிள்ளைகளுக்கு அடைக்கலமா யிருப்பார்.⁾ 27⁽ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் வாழ் வளிக்கும் ஊற்றாகும்; சாவை விளைவிக்கும் கண்ணிகளுக்கு அது மனிதரைத் தப்புவிக்கும்.⁾ 28⁽மக்கள் தொகை உயர, மன்னரின் மாண்பும் உயரும்; குடி மக்கள் குறைய, கோமகனும் வீழ்வான்.⁾ 29⁽பொறுமையுள்ளவர் மெய்யறிவாளர்; எளிதில், சினங்கொள்பவர் தம் மடமையை வெளிப்படுத்துவார்.⁾ 30⁽மன அமைதி உடல் நலம் தரும்; சின வெறியோ எலும்புருக்கியாகும்.⁾ 31⁽ஏழையை ஒடுக்குகிறவர் அவரை உண்டாக்கினவரை இகழ்கிறார்; வறியவருக்கு இரங்குகிறவர் அவரைப் போற்றுகிறார்.⁾ 32⁽பொல்லார் தம் தீவினையால் வீழ்ச்சி யுறுவார்; கடவுளுக்கு அஞ்சி நடப்பவர் சாகும் போதும் தம் நேர்மையைப் புகலிடமாகக் கொள்வார்.⁾ 33⁽விவேகமுள்ளவர் மனத்தில் ஞானம் குடிகொள்ளும்; மதிகேடரிடம் அதற்கு இடமே யில்லை.⁾ 34⁽நேர்மையுள்ள நாடு மேன்மை அடையும்; பாவம் நிறைந்த எந்த நாடும் இழிவடையும்.⁾ 35⁽கூர்மதியுள்ள பணியாளனுக்கு அரசர் ஆதரவு காட்டுவார்; தமக்கு இழிவு வருவிப்பவன்மீது சீற்றங்கொள்வார்.⁾