1⁽எல்லா மனிதர்களையும்போல␢ நானும் இறப்புக்குரியவன்;␢ நிலத்தினின்று உண்டாக்கப்பட்ட␢ முதல் மனிதரின் வழித்தோன்றல்.␢ என் தாய் வயிற்றில்␢ என் உடல் உருவாயிற்று.⁾
2⁽ஆணின் உயிர்த்துளியினாலும்␢ திருமண இன்பத்தினாலும்␢ பத்து மாத காலமாகக்␢ குருதியோடு உறைந்து␢ என் உடல் உருவெடுத்தது.⁾
3⁽நான் பிறந்தபொழுது␢ எல்லாரையும்போல நானும்␢ வெறும் காற்றையே சுவாசித்தேன்;␢ என் உடலியல்புக்கு ஒத்த␢ மண்ணில் கிடத்தப்பட்டேன்;␢ முதன்முதலில் அழுகுரல் எழுப்பினேன்.⁾
4⁽துணிகளில் பொதியப்பட்டேன்;␢ பேணி வளர்க்கப்பட்டேன்.⁾
5⁽எந்த மன்னரும்␢ இதற்கு மாறுபட்ட வகையில்␢ வாழ்க்கையைத் தொடங்கியதில்லை.⁾
6⁽எல்லோரும் ஒரே வகையில்␢ பிறக்கின்றனர்;␢ ஒரே வகையில் இறக்கின்றனர்.⁾
7⁽எனவே நான் மன்றாடினேன்;␢ ஞானம் எனக்குக் கொடுக்கப் பட்டது.␢ நான் இறைவனை வேண்டினேன்;␢ ஞானத்தின் ஆவி␢ என்மீது பொழியப்பட்டது.⁾
8⁽செங்கோலுக்கும் அரியணைக்கும் மேலாக␢ அதை விரும்பித் தேர்ந்தேன்;␢ அதனோடு ஒப்பிடும்போது,␢ செல்வம் ஒன்றுமே இல்லை␢ என்று உணர்ந்தேன்.⁾
9⁽விலையுயர்ந்த மாணிக்கக்கல்லும்␢ அதற்கு ஈடில்லை;␢ அதனோடு ஒப்பிடும்போது,␢ பொன்னெல்லாம் சிறிதளவு␢ மணலுக்கே நிகர்; அதற்குமுன் வெள்ளியும்␢ களிமண்ணாகவே கருதப்படும்.⁾
10⁽உடல் நலத்திற்கும்␢ அழகிற்கும் மேலாக␢ அதன்மீது அன்புகொண்டேன்;␢ ஒளிக்கு மாற்றாக␢ அதைத் தேர்ந்தெடுத்தேன்.␢ ஏனெனில் அதன் சுடரொளி␢ என்றும் மங்காது.⁾
11⁽ஞானத்தோடு எல்லா நலன்களும்␢ என்னிடம் வந்து சேர்ந்தன.␢ அளவற்ற செல்வத்தை␢ அது ஏந்தி வந்தது.⁾
12⁽அவற்றிலெல்லாம் நான் மகிழ்ந்தேன்;␢ ஏனெனில் ஞானமே␢ அவற்றை வழி நடத்துகிறது;␢ அதுவே அவற்றையெல்லாம்␢ ஈன்றெடுத்தது என்பதை அறியாதிருந்தேன்.⁾
13⁽நான் கள்ளங்கபடின்றிக் கற்றேன்.␢ கற்றதை முறையீடின்றிப்␢ பிறரோடு பகிர்ந்து கொண்டேன்.␢ அதன் செல்வத்தை நான் மறைப்பதில்லை.⁾
14⁽மனிதர்களுக்கு அது என்றும்␢ குறையாத கருவூலம்.␢ அதை அடைவோர் கடவுளோடு␢ நட்புக்கொள்வர்;␢ நற்பயற்சி அளிக்கும்␢ கொடைகளால் நற்சான்று பெற்றவராவர்.⁾
15⁽கடவுளது திருவுளத்திற்கு␢ ஏற்பப் பேசவும்,␢ நான் பெற்றுக்கொண்ட கொடைகளுக்கு␢ ஏற்பச் சிந்திக்கவும்,␢ கடவுள் எனக்கு அருள்புரிவாராக!␢ ஏனெனில் ஞானத்துக்கு␢ அவரே வழிகாட்டி,␢ ஞானிகளைத் திருத்துகிறவரும் அவரே.⁾
16⁽நாமும் நம் சொற்களும் அவருடைய␢ கைகளில் இருக்கின்றோம்.␢ அதுபோல் எல்லா அறிவுத்திறனும் கைத்திறனும்␢ அவருடைய கைகளில் உள்ளன.⁾
17⁽இருப்பவை பற்றிய உண்மையான அறிவை␢ எனக்கு அளித்தவர் அவரே;␢ உலகின் அமைப்பையும்␢ மூலப்பொருள்களின் செயல்பாட்டையும்␢ நான் அறியச் செய்தவரும் அவரே.⁾
18⁽காலங்களின் தொடக்கம், முடிவு, மையம்,␢ கதிரவனின் சுழற்சியால்␢ ஏற்படும் மாற்றங்கள்,␢ பருவ கால மாறுபாடுகள்,⁾
19⁽ஆண்டுகளின் சுழற்சிகள்,␢ விண்மீன்களின் நிலைக்களங்கள்,⁾
20⁽உயிரினங்களின் இயல்பு,␢ காட்டு விலங்குகளின் சீற்றம்,␢ காற்று வகைகளின் வலிமை,*␢ மனிதர்களின் எண்ணங்கள்,␢ பல்வேறு செடிவகைகள்,␢ வேர்களின் ஆற்றல்,⁾
21⁽இவைபோன்ற மறைவானவைபற்றியும்␢ வெளிப்படையானவைபற்றியும்␢ கற்றறிந்தேன்.␢ எல்லாவற்றையும் உருவாக்கிய␢ ஞானமே எனக்கு இவற்றைக்␢ கற்றுக்கொடுத்தது.⁾
22⁽ஞானம் — ஆற்றல் கொண்டது.␢ அவ்வாற்றல் அறிவுடையது;␢ தூய்மையானது; தனித்தன்மை வாய்ந்தது;␢ பலவகைப்பட்டது; நுண்மையானது;␢ உயிரோட்டம் உள்ளது; தெளிவுமிக்கது;␢ மாசுபடாதது; வெளிப்படையானது␢ ; கேடுறாதது; நன்மையை விரும்புவது; கூர்மையானது.⁾
23⁽ஞானம் — எதிர்க்கமுடியாதது;␢ நன்மை செய்வது;␢ மனிதநேயம் கொண்டது;␢ நிலைபெயராதது; உறுதியானது;␢ வீண்கவலை கொள்ளாதது;␢ எல்லாம் வல்லது;␢ எல்லாவற்றையும் பார்வையிடுவது;␢ அறிவும் தூய்மையும் நுண்மையும்␢ கொண்ட எல்லா உள்ளங்களையும்␢ ஊடுருவிச் செல்வது.⁾
24⁽ஞானம் — அசைவுகள் எல்லாவற்றையும்விட␢ மிக விரைவானது;␢ அதன் தூய்மையினால்␢ எல்லாவற்றிலும் நிரம்பி நிற்கிறது;␢ எல்லாவற்றையும் ஊடுருவிச் செல்கிறது.⁾
25⁽ஞானம் — கடவுளின் ஆற்றலிலிருந்து␢ புறப்படும் ஆவி; எல்லாம் வல்லவரின்␢ மாட்சியிலிருந்து எழும் தூய வெளிப்பாடு.␢ எனவே மாசுபட்டது எதுவும்␢ அதனுள் நுழையமுடியாது.⁾
26⁽ஞானம் — என்றுமுள␢ ஒளியின் சுடர்;␢ கடவுளது செயல்திறனின்␢ கறைபடியாக் கண்ணாடி;␢ அவருடைய நன்மையின் சாயல்.⁾
27⁽ஞானம் — ஒன்றே என்றாலும்,␢ எல்லாம் செய்ய வல்லது;␢ தான் மாறாது,␢ அனைத்தையும் புதுப்பிக்கிறது;␢ தலைமுறைதோறும்␢ தூய ஆன்மாக்களில் நுழைகிறது;␢ அவர்களைக் கடவுளின்␢ நண்பர்கள் எனவும் இறைவாக்கினர்கள்␢ எனவும் ஆக்குகிறது.⁾
28⁽ஞானத்தோடு வாழ்கின்றவர்கள்மீது␢ அன்பு செலுத்துவது போல␢ வேறு எதன்மீதும் கடவுள்␢ அன்பு செலுத்துவதில்லை.⁾
29⁽ஞானம் — கதிரவனைவிட அழகானது;␢ விண்மீன் கூட்டத்திலும் சிறந்தது;␢ ஒளியைக் காட்டிலும் மேலானது.⁾
30⁽இரவுக்குப் பகல் இடம் கொடுக்கிறது.␢ ஆனால், ஞானத்தைத்␢ தீமை மேற்கொள்ளாது.⁾